ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனிமைப்படுதல் ஊரடங்கினை மீறி பெருமளவானவர்கள் நேற்று திரண்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறுதிசடங்கில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வதால் நாடு முழுவதுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து தமது பிராந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது கடற்படையினரின் மத்தியிலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியிலும் மாத்திரம் கொரோனா வைரஸ் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காவிட்டால் இரண்டாம் சுற்று ஆபத்து உருவாகலாம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எனினும் சிரேஸ்ட அமைச்சர்களின் இறுதிசடங்குகள் இடம்பெறும் இடங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதால் ஆபத்துக்கள் உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.