கொரோனா வைரஸினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
13 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியைகள் இன்று(செவ்வாய்கிழமை) நீர்கொழும்பு மாநகர சபை பொது மயான பூமியில் இடம்பெற்றிருந்தது.
நீர்கொழும்பு – போருதொடை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இதய நோய் இருப்பதாக தெரிவித்து நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த குறித்த நபர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் சிகிச்சை அறை சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 14 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 106 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.