இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக்கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுவதாகவும், இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு நோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் இலங்கையின் அம்பாறையில் இனங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிளக் பங்கஸ் நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இலகுவாக தாக்கக்கூடியதாகும். இது ஒருவரிலிருந்து பிரிதொரு பரவும் தன்மை கொண்டது.
எமக்கு அயல் நாடான இந்தியாவில் இந்த நோயும் தீவிரமாகப் பரவி வருகிறது. இலங்கையில் இந்நோயால் பாதிப்பு தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான தரவுகள் எமக்கு கிடைக்கப் பெறவில்லை.
ஆனால் இந்தியா எமக்கு மிகவும் அயல் நாடு என்பதால் இலங்கையில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது.
அதனால் தான் இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிளக் பங்கஸ் நோய் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
இருந்த போதிலும் இந்த பங்கஸானது கொவிட் தொற்றின் காரணமாகப் பரவுகிறதா அல்லது வேறு காரணிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றதா என்பதில் இந்தியா குழப்பமடைந்துள்ளது.
‘மிகோ மைகோஸிஸ்’ எனப்படும் பங்கசினால் இந்த நோய் பரவுகிறது. கோவிட் தொற்றுக்கு மத்தியில் ஏனைய நோய்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த நோயின் அறிகுறிகளாக கண்கள் வீங்குதல், கண் மடல்கள் வீங்குதல், முகத்தில் பழுக்கள் ஏற்படல், வாயில் தொற்று ஏற்படல் என்பனவாகவுள்ளன.
இவ்வாறான நோய்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். இனி வரும் காலங்கள் மிகவும் தீர்க்கமானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.