கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களிடம் மஹிந்த விடுத்துள்ள வேண்டுகோள்!

0

கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் விஞ்ஞானரீதியிலான அணுகுமுறைகளை கண்டறிந்து வரும் நிலையில், அண்மை நாட்களாக இலங்கையில் மத நம்பிக்கைகள் பக்கம் கவனம் செலுத்தும் புதிய போக்கு உருவாகி வருகிறது.

கொரோனாவை விரட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்த பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக உலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விஷேட பூஜை வழிபாடு நடத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையிலும், ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு ஆசி கோரும் வகையிலும், சகல பௌத்த விஹாரைகளிலும் ரத்தன சூத்திர மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ளுமாறும், அதே போல் நாடு முழுவதிலும் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வணக்கஸ்தலங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறும் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கெளரவ மஹிந்த ராஜபஷவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களிலே, மக்கள் அனைவரும் இடர் தீர்ந்து நலமோடு வாழவேண்டி, நாளாந்தம் இடம்பெற்று வரும் பிரார்த்தனை வழிபாடுகளோடு, சிறப்பு ஏற்பாடாக, விசேட பிரார்த்தனை வழிபாடுகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020 ) மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை இலங்கைத் திருநாட்டில் உள்ள சகல வணக்கஸ்தலங்களிலும் ஒரே நேரத்தில் நடாத்திக்கொள்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலே, நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களிலும், இந்த இடர்பாட்டிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு நலமோடு வாழ, பிரார்த்தனைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாள்தோறும் இடம்பெற்றுவரும் இத் தருணத்தில் விசேடமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020 ) மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விஷேட பிரார்த்தனையின் போது மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவை விரட்டும் நடவடிக்கையில் கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும், நுவரேலியா கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் சுவாமி ஆலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனும், வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனும் ஈடுபடுவார்கள்.