சம்மாந்துறை சம்பவத்தில் துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சியளித்தவர் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை!

0

அம்பாறை, சம்மாந்துறையில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு சூட்டுப்பயிற்சி வழங்கிய சந்தேகத்தில் மற்றுமொரு சந்தேகநபரை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேகநபர் மறுநாள் கைதாகி இருந்தார். அத்துடன் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவைகளுடன் கூடிய ரவைக் கூட்டையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த கைதான சந்தேகநபரைத் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேலதிக தகவலைப் பெற்றபின்னர் இன்று (வியாழக்கிழமை) சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு, இரண்டாவதாக கைதான சந்தேகநபர் ஏற்கனவே கைதான சந்தேகநபருக்கு துப்பாக்கி சுடுவது குறித்து பயிற்சி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று கைதான சந்தேகநபரது இடது கையில் 4 விரல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கவே மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்துவைத்தமை, அதனைப் பயன்படுத்த உதவி செய்தமை, துப்பாக்கிச் சூட்டு பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய கைதானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பயங்கரவாதக் குழுக்களுக்கும் கைதான சந்தேகநபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி, பாகிஸ்தான் நாட்டுத் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் இரண்டவது சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.