ஜனாசா விவகாரம் : பிரதமரின் விருப்பமே அன்றி உத்தரவல்ல – கம்மன்பில

0

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம், சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினாலேயே மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.