ஜுன் இறுதி வரை பயணக் கட்டுப்பாடு! – வைரஸை கட்டுப்படுத்த அரச மேல்மட்டத்தில் ஆலோசனை

0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் மாதம் இறுதி வரை முன்னெடுப்பதற்கு அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக பிரபல தமிழ் பத்திரிகையான தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழன் பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தியாக இந்த செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பயணக் கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதி வரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்த போதும், அதனையும் தாண்டி பயணத் தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள காலப் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால், இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக சொல்லப்பட்டது.

நடமாடும் விபாயாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறைந்த வருமானமுடைய மக்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதர அவசர சேவைகள் இயங்கும். அதனடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கின்றது என அந்த செய்தியில் மேலும் கூறப்படுகின்றது.

வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயக்க வைக்கவும் ஆலோசிக்கப்படுகின்றது என அரசின் முக்கிய பிரமுகரொருவரை மேற்கோள்காட்டி, அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடவும் அரசு தீர்மானித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடு குறித்தான அரசின் புதிய அறிவிப்பு ஜுன் 5 அல்லது 6ம் திகதிகளில் வெளிவருமென மேலும் சொல்லப்பட்டது