சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டு.
எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.
உன்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.