திருகோணமலை கடற்பரப்பில் எரிபொருள் கடல் நீருடன் அதிகளவில் கலப்பதாக தெரிவிப்பு!

0

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தரையிறக்கப்படும் எரிபொருள் கடல் நீருடன் அதிகளவில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்துமாறு திருகோணமலை துறைமுகத்தில் எரிபொருள் தரையிறக்கும் இந்திய நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலை துறைமுகம் உலகில் இருக்கும் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகும்.

இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளில் திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதன் பிரகாரம், மாதாந்தம் நான்கைந்து பெரிய கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதுடன் அவற்றில் ஒரு தடவைக்கு 20,000 தொன் எரிபொருள் கொண்டுவரப்படுகின்றது.