நல்லூர் கந்தசுவாமி கோவிலை, சிங்கள இளவரசரான சபுமல் குமாரவே கட்டினார் என்று தொல்பொருள் முகாமைத்துவ செயலணியின் உறுப்பினரான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள, தொல்பொருள் முகாமைத்துவ செயலணி குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது இந்தச் செயலணியின் நோக்கம் அல்ல என்றும் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிதைந்துள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளப்படுத்தி அதனை பாதுகாப்பதே தமது பிரதான நோக்கம் என்றும் குறிப்பிட்ட அவர், பௌத்த மத மரபுரிமைகளை மட்டுமன்றி பிற மதங்களின் உரிமைகளும் செயலணியின் ஊடாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஆய்வு நடவடிக்கைகளின்போது கிடைக்கும் தரவுகளைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மேதானந்த தேரர், கோகண்ண விகாரையின் மீதே திருகோணேச்சரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கான தொல்பொருள் சான்றாதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கேயரின் படையெடுப்பினால் அந்த விகாரை அழிக்கப்பட்டதாகவும், அதற்குப் பிற்பட்ட காலத்திலேயே அங்கு திருகோணேச்சரம் ஆலயம் கட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோட்டை இராசதானி காலத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தாங்கள் நல்லூர் ஆலயத்தை உரிமை கோரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள மேதானந்த தேரர், இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், இரு தரப்பு மத வழிபாடுகள் மற்றும் கட்டடக்கலை ஊடாக இது உறுதியாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.