பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் இளைஞர்கள்!

0

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் அம்பாறை  மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில்  நேற்று(புதன்கிழமை) காலை முதல் மாலை வரை   அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை காணமுடிந்தது.

கல்முனை பிராந்தியத்தில் சில பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் பாண்டிருப்பு போன்ற பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலரின்  செயற்பாடுகள்  அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை  மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி, மீன் போன்ற பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் வியாபாரிகள் ஊடாக விற்பனை செய்யும் நிலையில் மீன் இறைச்சி விநியோகத்திற்காக அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள  போதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதுடன் பயணத்தடையினை  மீறுவோருக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில் பொலிஸ் தரப்பு தகவலின் ஊடாக அறிய முடிகின்றது.

மேலும் பாண்டிருப்பு  பகுதியில் நேற்றும் இன்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல்,  இளைஞர்கள் குழுக்களாக சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித் திரிதல்,  மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாக கூடி இருத்தல்,  அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல், கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், என இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கதையாகவே உள்ளன.