பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி: விஷமிகளினால் பேரணிக்கு இடையூறு

0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள்  எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில  வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துகொண்டிருந்தபோதே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை குறித்த பகுதிக்கு  விரையுமாறு  பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன், இவ்வாறான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.