மட்டக்களப்பு, பாலமீன்மடுவைச் சேர்ந்த மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் கூலித் தொழில் செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்குச் சட்டத்தினால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டியுள்ள நிலையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மக்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது.
அந்தவகையில், இன்று பாலமீன்மடுவைச் சேர்ந்த மக்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகளை இந்த அமைப்பு வழங்கியுள்ளது.
குறித்த பணியில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் உறுப்பினருமான வி.பூபாலராஜா, இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு அதன் தவிசாளர் இரா. சாணக்கியன் தலைமையில் மக்களுக்கான பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்ற நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.