அடுத்த மாதம் இலங்கையில் ஏற்படப்போகும் ஆபத்து என்ன?

0

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்வதற்கு எதிர்ப்புடன் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரச்சினை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

மக்களின் சுகாதார பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மக்கள் முகம் கொடுக்கவுள்ள நிலைமை தொடர்பிலேயே ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

கொவிட் தொற்று மிகவும் வேகமாக பரவுகின்றது. எனினும் அதற்கு முகம் கொடுப்பதற்டகு எவ்வித ஆயத்தமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு, ஒக்ஸிஜன் தட்டுப்பாடு, வென்டிலேட்டர் தட்டுப்பாடு, வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கு தட்டுப்பாடுகள் உள்ள நிலையில் கொவிட் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

தற்போது நாங்கள் ஒரு தீர்மானமிக்க நிலைமையில் உள்ளோம். வைத்தியர்களின் ஆலோசனைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளுக்கமைய தீர்மானம் எடுக்கவில்லை என்றால் நாட்டு மக்கள் ஆபத்திற்கு தளப்படுவார்கள்.

இலங்கையில் கொவிட் மரணங்கள் நாளாந்தம் நூற்றுக்கு மேல் காணப்படும் என அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடாமல் மக்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கொவிட் தடுப்பு குழு தோல்வியடைந்துள்ளது.

அரசியலமைப்பில் அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை குழு இந்த பொறுப்பை எடுக்க வேண்டும். நான் ஆரம்பத்திலேயே கூறினேன், யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இதனால் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பொறுப்பை எடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவருடைய ஆதரவையும் தற்போதே பெற்று செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.