அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா – நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் ஆராய்வு!

0

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பயணக்கட்டுப்பாட்டினை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்ற உத்தியோகப்பூர்வ தகவல் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய தினம் மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன்போதே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதை மறுக்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக பயணக்கட்டுப்பாட்டினை தொடர்ந்தும் நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கொரோனா தொற்றுடன் ஐவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐந்து தொற்றாளர்களும் தொமட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளமை, குறித்தும் சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டி நீடிப்பதா அல்லது உடனடியாக முழு முடக்கத்திற்கு செல்வதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.