அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிப்பு!

0

அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சீனி, பருப்பு, கிழங்கு, உலர்ந்த மிளகாய், டின்மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி கடந்த வௌ்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் திராட்சை, அப்பிள், தோடம்பழம், பேரிச்சம்பழம், மரமுந்திரிகை, சோளம், மாஜரின், வாசனைத் திரவியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல பொருட்களின் விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “சிற்றுண்டிசாலைகளை இன்று திறந்தாலும், அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளது.

இதற்கமைய முக்கியமாக உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது. அத்துடன் மரக்கறி ரொட்டி, ரோல்ஸ், பெட்டிஸ், கொத்து, பராட்டா, முட்டை ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட ஹோட்டலில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பொருட்களினதும் விலைகளை உயர்த்துவதற்கு நேரிட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் தேங்காய் எண்ணை பயன்படுத்தப்படுவதால் இந்த நிலையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.