அதிக விலையில் பொருட்கள் விற்றால் வர்த்தகரின் அனுமதிப்பத்திரம் இரத்து

0

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இரத்துச் செய்யப்படும் அனுமதிப்பத்திரங்களை அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக இரண்டு வர்த்தகர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஒரு சில வர்த்தகர்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும், அந்த முறைபாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.