அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டால் அவை சீல் வைக்கப்படும் – தி.சரவணபவன் எச்சரிக்கை!

0

ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றிற்கு சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பலசரக்கு நிலையங்கள், மருந்துக்கடைகள், பழம் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவைகள் மாத்திரமே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. கடந்தமுறை இந்த கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்தோம். ஆனால் இம்முறை அவ்வாறு கடைகள் திறக்கப்படுமானால் அக்கடைகள் சீல் வைத்து மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்  வீதியோர வியாபாரங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டார்.