அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள்

0

அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

அபாய வலயங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்துவது ஏற்புடையது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடி ஆகியவற்றை திறப்பது சிறந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் போது சமூக இடைவெளியைப் பேணுவது முக்கியமானது எனவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசனங்களில் 50 வீதத்திற்கு மக்களை வரையறுத்து போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.