அபிவிருத்தி என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படும் எமது பிரதேசங்கள்! ஜனா

0

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியில் புதிதாக அமையப்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றிருந்தது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தைத் திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலங்கள் மாற வேண்டும்.

இந்த நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதற்கு எற்றாபோல் அனைவரும் வாழ பழகி கொள்ளவும் வேண்டும்.

அபிவிருத்தி எனும் மாயைக்குள் எமது மக்கள் அகப்பட்டு, தற்போது எமது பிரதேசத்தைப் பறிகொடுக்கும் நிலமைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையும், கொழும்பையும் ஆட்டிப்படைத்து தற்போது எமது மாவட்டத்தையும் ஆட்டிப்படைக்கின்ற கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் மக்களது உடல் நிலையைப் பாதிப்பது மாத்திரமல்லாமல் மனோ நிலயையும், பொருளாதாரத்தையும் பாதித்திருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்த வைரசுடன் வாழ்வதற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். அதற்குரிய தடுப்பூசி மிக விரைவில் வரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறிகின்றோம்.

இந்த நிலையில் கொவிட் – 19 இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட மனிதர்களை சிகிச்சை நிலையத்திற்கு, கொண்டு செல்லப்பட்டு, அங்கு குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், அவர்களிடமிருந்து அந்த வைரஸ் வெளியேறி விட்டதா என்பதை பரிசோதிக்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்லாமல், முழு இலங்கையிலும், அவர்களை வீட்டிற்கு அனுப்பப்படுவதென்பது, வேண்டத்தகாத செயற்பாடாகவுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறு பல வைரஸ் தாக்கங்களிற்கு சிகிச்சை பெற்றும் சில வாரங்களின் பின்னர் அது வேறு நோய்த்தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களும், உண்டு.

இந்த நிலையில் கொவிட் – 19 இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட மனிதர்களை சிகிச்சை நிலையத்திற்கு, கொண்டு சென்று, அங்கு குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தினாலும், அவர்களிடமிருந்து அந்த வைரஸ் வெளியேறி விட்டதா என்பதை பரிசோதிக்காமல் மீண்டும் அவர்களை சமூகத்துடள் இணைப்பதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே அவ்வாறானவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் போது மீண்டும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்னரே அனுப்பப்படல் வேண்டும் என்பது எனது எண்ணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.