அரச ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை

0

அரச ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீர் வழங்கல், மின்சார விநியோகம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் எதிர்வரும் 03 மாதங்களுக்கு பிரதி வௌ்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்குமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்தில் தடைகள் நிலவுகின்றன.

இதனால் அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கடமை நாட்களில் ஒரு நாள் விடுமுறையை வழங்கி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளதாக எதிர்வுகூறப்படும் உணவுத் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது உகந்ததென ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.