அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது விசேட சுற்றுநிரூபம்

0

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் தொடர்பான விசேட சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, சில பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலையுடன் நீக்கப்பட்டதையடுத்து அரச சேவைகளை வழமைபோல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு மீளத் திறக்கப்படும் போது அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு கடமைக்கு அழைக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெறும் ஊழியர்களுக்கு இந்த நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமை போல கடமைக்குச் சமூகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளை தவிர்ந்த ஏனைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் என்றும், கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியில்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படும்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும், அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமூகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.