இறுதிப் போர்க் குற்றங்களுக்கு ராஜபக்சர்களே நேரடிப் பொறுப்பு! மனித உரிமைகள் கண்காணிப்பகம் மிகவும் காட்டமான அறிக்கை

0

இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள். எனவே, இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘திறந்த காயங்கள் மற்றும் பெருகி வரும் பேராபத்துக்கள்: கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை’ என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

“இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வழங்கும் விதமாக ஐ.நாவின் தீர்மானம் அமைய வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ச அரசுக்கு நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டும்.

இலங்கை அரசின் நீதி மீதான தாக்குதல்கள் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயத்தைக் காட்டுகின்றது. இலங்கையில் இறுதிப் போரின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கும் ஐ.நாவின் நெறிமுறை சார்ந்த தோல்வி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உடைய அதிகாரிகளைப் பதவிகளுக்கு நியமித்ததோடு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மறுத்து வருகின்றார்.

இலங்கையின் ஊடகங்கள் சுய தணிக்கையோடு செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை மீது இம்முறை கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றத் தவறுவது, உலகெங்கிலும் உள்ள அநியாயக்காரர்களுக்கு மோசமான செய்திகயைக் கொண்டு செல்லும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.