இலங்கையில் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

0

நாட்டில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டமையை அடுத்து சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு ஒரு கோவிட் வைரஸ் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்க்க அனைவரும் பொறுப்போடு செயல்பட வேண்டும் பணியகம் கோரியுள்ளது.

நாட்டில் மீண்டும் வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், சமூக ஊடகங்களில், குறிப்பாக தெற்கில் கட்சிகள் மற்றும் நிகழ்வுகள் விளம்பரப்படுத்தப்படுவதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் ஒரு கடுமையான நிலைமைக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்த பின்னரும் அடுத்த சில நாட்களில் பல கடற்கரை விருந்துகள் மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் புத்தாண்டின் போது கோவிட் வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றத் தவறியமையே தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அண்மையில் இலங்கையில் வைரஸின் புதிய வகைகள் கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பான அறிவியல் தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், கைகளை கழுவவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்ட எவரும் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதே நேரத்தில் தேவையற்ற பயணங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.