ஊரடங்குச் சட்டம் எப்படி இருக்கு எனப் பார்க்கச் சென்ற மூவர் கைது- மட்டக்களப்பில் சம்பவம்!

0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர்.

இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 8.10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிஸார் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது இரு மோட்டார் சைக்கிளில் வெவ்வேறு வீதிகளில் பயணித்த 3 பேரை பொலிஸார் இடைநிறுத்தி, எங்கு செல்வது என வினவினர்.

இதன்போது, அவர்கள் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு என பார்ப்பதற்காக வீதிக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் ஓட்டுமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21, 28, 40 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.