ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா – சட்ட பூர்வமில்லாததா என்று குழப்பமடைய தேவையில்லை – அஜித் ரோஹன

0

ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா- சட்ட பூர்வமில்லாததா எனும் குழப்பமடைய வேண்டியத் தேவைக்கிடையாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நுகேகொடையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டபோது, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது சட்ட ரீதியானது அல்ல என்ற கருத்தொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்றம் அவ்வாறான ஒரு விடயத்தைக் கூறவில்லை. ஊடகங்களில் இதுதொடர்பாக தவறான கருத்துக்கள் வெளிவந்தன. மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டே நாம் இந்த ஊரடங்களை பிறப்பித்துள்ளோம்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாகவே இது பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் யோசனைக்கு இணங்க, இதனை எதிர்க்காலத்திலும் நடைமுறைப்படுத்தவே நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

ஊரடங்கு சட்டம் தொடர்பாக எந்தவொரு சிக்கலும் கிடையாது. இதனை மீறி செயற்படுவோர்களை கைது செய்தல், தனிமைப்படுத்த முடியும்.

இதுதொடர்பாக 3 வர்த்தமானி அறிவித்தல்களும் வந்துள்ளன. மார்ச் 5 ஆம் திகதி, மார்ச் 20 ஆம் திகதி, ஏப்ரல் 11 ஆம் திகதிகளில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிவந்துள்ளன.

அத்தோடு, பொது இடைவெளியைப் பேணும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் முடியாது“ எனத் தெரிவித்துள்ளார்.