ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை – அரசாங்கம் அறிவிப்பு!

0

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அமுல் படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக உள்ள பிரதானமான வழி வைரஸிற்கு ஆட்படுவதை தவிர்ப்பதாகும். அலுவலகங்கள், கடைகள், பேருந்துகள், தொடருந்துகள் போன்ற பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியை பேண வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுவது மிகவும் பொருத்தமான முறையாகும்.

அதே போன்று மருத்துவ நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு கடந்த சில நாள்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த வெள்ளி மாலை 6 மணி முதல் நாளை, 23 திங்கள் காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் 24ஆம் செவ்வாய் காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 நீக்கப்பட்டு அன்றைய தினம் பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

நாளை காலை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் அன்றாட தேவைகளை கொள்வனவு செய்வதற்காக சந்தைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருள்களை கொள்வனவு செய்வது அவசியம் என்ற போதும் வைரஸுக்கு ஆட்படுவதை தவிர்ப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடைகளுக்கு செல்லும் போதும் கடைகளுக்கு உள்ளேயும் நபர்களுக்கிடையில் ஒரு மீற்றர் தூரத்தை பேண வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு வாயை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து, தொடருந்து மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட இடைவெளியை பேண வேண்டும். பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்ய வரும் போதும் இந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு நினைவூட்டப்படுகிறது.

பொருள்களை கொள்வனவு செய்ய வரும் போது ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வருகை தருவதன் மூலம் மக்கள் ஒன்று சேர்வதை குறைக்க முடியும். அது சமூக இடைவெளியை பேண உதவும்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்கள் போதுமானளவு களஞ்சியப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தட்டுப்பாடின்றி நாடுமுழுவதும் பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேலையில் பயன்படுத்த தேவையான பொருள்களை மட்டுமே கொள்வனவு செய்வது சன நெரிசலில் கழிக்கும் காலத்தை குறைக்க உதவும்.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுமாறு கோரோனா ஒழிப்பு செயலணி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.