ஏப்ரல் 6ஆம் திகதி பொது விடுமுறை

0

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.6-ம் திகதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையர் எம்.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்.6-ம் திகதி நடைபெறுகிறது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135பி-யின்அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள்,

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்டநிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்.6-ம் திகதி, அவர்கள் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கட்டுமானத் தொழில்உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் ஏப்.6-ம் திகதி விடுப்பு வழங்க வேண்டு்ம்.

அந்த விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்படும் ஊதியமாகவும், பணியின்தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்.6-ம் திகதி வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து வேலை அளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.