ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நவின் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ரணில் விக்ரமசிங்க இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினமும் இறுதித் தீர்மானமொன்று எட்டப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.