கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது – சாணக்கியன்

0

கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்கு சொந்தமானது இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில்  நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “எமது இனத்தின் உரிமைக்காக என்றுமே குரலெழுப்புவேன் என்னை முழுமையாக நம்புங்கள் என் இறுதி மூச்சு உள்ளவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே பயணிப்பேன். கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்கு செந்தமானது. ஒது சிங்கள பௌத்த நாடு என எனது கட்சியும் ஏற்றுக்கொள்ளாது நானும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 304 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிகமான மேடைகளில் என்னைத்தான் விமர்சனம் செய்கிறார்கள் இதனை அவதானிக்கும் போது என்னுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினை எதிர்க்கின்ற வாக்குகளாகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.