கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் அரங்குகள்

0

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள அரங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீளவும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சினிமா திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேடை நாடகம் மற்றும் ஏனைய இசை நிகழ்ச்சிகளுக்காக அரங்குகளை திறப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வரையறைக் குட்பட்டதாக அரங்குகளை மீள திறத்தல் மேடை நாடகங்களை அரங்கேற்றல் மற்றும் ஏனைய இசை நிகழ்ச்சிகளுக்காக அரங்க மண்டபங்களின் ஆசன கொள்திறனில் (ஆசன எண்ணிக்கை) 50 சதவீத பார்வையாளர்கள் மாத்திரம் ஒரு காட்சியில் பங்கு கொள்வதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அரங்க மண்டபங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரங்க காட்சி நடவடிக்கைகளில் கொவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகளை தீவிரமாக கடைப்பிடிப்பது மிக அவசியமானதாகும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் திரையரங்குகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனாவின் வீரியம் இலங்கையில் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், பல துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.