கனடாவின் அரச பூங்காவில் அமையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

0

சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த, இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிரம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிரம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள் பிரதிநிதி மாட்டின் மெடுரஸ் அவர்களால் பிரம்டன் தமிழ்ச்சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்கக் கொண்டுவரப்பட்ட பிரம்டன் நகரசபைக்குச் சொந்தமான காணியில், முள்ளிவாய்க்காலில் மறைந்த தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக ஜனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்ற நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டமை யாவரும் அறிந்ததே.

பொதுவாக நகரசபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் தீர்மானம். அடுத்த வாரம் நடைபெறும் கூட்ட அமர்வில் கலந்தாலோசனை செய்யப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படும்.

இந்தவகையில் நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான இரண்டாவது கூட்டம் கடந்த 27ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பிரம்டன் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதியாக பிரம்டன் தமிழ் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினரும், பிரம்டன் தமிழ் முதியோர் ஒன்றியத்தின் ஆலோசகருமான அமலீதன் சேவியர் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கு தமிழ் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத்தூபி (Tamil GenosideMemorial) என்ற பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்ப மனுவை எடுத்துரைத்ததுடன் தனக்குக் கிடைத்த இவ்வரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது சரியாகப் பயன்படுத்தியதன் விளைவாகத் தமிழ் மக்கள் சார்பான கோரிக்கை மீண்டும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி வடிவம் பெற்றமை பாராட்டுக்குரியது மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமுமாகும் என்றால் அது மிகையல்ல.

எமது தாயகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனால் தாங்கமுடியாத மனவுழைச்சலில் இருந்தபோது புலம்பெயர் மண்ணில் அமைத்தே தீரவேண்டும் என்று எமக்கு உற்சாகமளித்தது மட்டுமல்லாமல் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய நகரபிதா பற்றிக் பிறவுன் அவர்களுக்கும் ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் பிரம்டன் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சில இடங்களில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தாலும் முதன் முறையாக அரச பூங்கா ஒன்றில் கனடாவில் அமைகின்றமை குறிப்பிடத் தக்கது.