கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்!

0

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிறக்கவிருக்கும் சிசுவையும், பிறந்த சிசுவையும் பாதுகாப்பதற்கு இயன்றளவு விரைவாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் தற்போது கோவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளில் பெருமளவானோருக்கு குருதி உறைதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்பன ஏற்படுகின்றன.

இந்த நிலைமை தீவிரமடையுமாயின் அது பிறக்கவுள்ள அல்லது பிறந்த சிசுவின் உயிரிருக்கும், தாயின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

எனவே இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

தடுப்பூசி வழங்கப்படும் எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறில்லை எனில் 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பெயர் , முகவரி உள்ளிட்ட தகவல்களை வழங்கியதன் பின்னர் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய சிரமம் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்கால சந்ததியினரின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது சகலரதும் கடமையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.