கல்முனை பிரதேச செயலக விவகாரம் – அதிர்ச்சி தகவலினை வெளியிட்டார் சாணக்கியன்

0

மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்.

எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். 2020ஆம் ஆண்டு அவசரமாக தேர்தல் நடத்தியமையினாலேயே Covid 19 முதலாவது அலையை எதிர்கொண்டோம்.

Covid 19 முதலாவது அலை ஏற்படுவதற்கான முழுக் காரணம் இந்த அரசாங்கமே. Covid 19 முதலாவது அலையிலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை இடம்பெற்ற Covid 19 முதலாவது அலையில் 20 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியது இந்த அரசாங்கம்.

Covid 19 மூன்றாவது அலை Fort City அலை. பாராளுமன்றம் இங்கு கூடியிருப்பது நாளைய தினம் Fort City இனது இரண்டாவது வாசிப்பினை எடுக்க வேண்டும் எனும் காரணத்திற்காகவே ஆகும்.

பல்வேறுபட்ட கருத்திட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வது என்று கூறி கிராமிய மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள்.

கிழக்கு மாகணத்தில் மாகண சபைத் தேர்தல் நடைபெறுமா? நடை பெறாதா? என்ற நிலை காணப்பகின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்கத்துடன் இணைந்து 20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் 2008 – 2012 வரை ஒரு தமிழ் முதலமைச்சர், 2013 – 2017  வரை முஸ்லீம் முதலமைச்சர் அடுத்த தேர்தலில் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரைக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ளார்கள்.

25 மாவட்டங்களில் 25 RDHS மாத்திரமே உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 26 வது RDHS ஒன்று உள்ளது. கல்முனைப் பிரதேசத்திற்கென ஒரு RDHS, அம்பாறை மாவட்டத்திற்கென ஒரு RDHS காணப்படுகின்றது. கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்று உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்துடன் நிலத்தொடர்பு இல்லாத கல்வி வலயம் ஒன்று உள்ளது.

இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்ற ஒன்றை உப பிரதேச செயலகமாக தரம் குறைத்துள்ளனர். இதற்கு கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு பின்னணியாக இருப்பார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இந்தச் செயலானது தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையில் இருக்கும் உறவினை சீர்குலைப்பதற்காகவே நடைபெறுகின்றது.

இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளார்கள், அசாத் சாலி அவர்களைக் கைது செய்து வைத்துள்ளார்கள், புர்கா அணிவதைத் தடை செய்துள்ளார்கள், மதரசாக்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

இதில் எதற்காவது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்களா? ஆனால் தமிழ் – முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக செயற்படுகின்றார்கள் இங்கு அவர்கள் அரசியல் ஆதாயத்தையும் தங்கள் இருப்பையும்  தக்கவைத்துக்கொள்ள முனைகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச தமிழ் அரசியல் வாதிகளும் மக்களுக்கு எதிரான செயல்களை மேற்கொள்கின்றார்கள். இராஜங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்கள் கூறினார் கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் கிழக்கு மாகண நிர்வாகத்தை முடக்குவேன் என்று.

ஆனால் இன்று அதைப் பற்றி எவ்வித பேச்சுக்களும் இல்லை. பிள்ளையான் அவர்கள் பாராளுமன்ற பங்குபற்றல் மற்றும் செயல்பாடுகளின் தர வரிசையில் 223 வது இடத்தில் காணப்படுகின்றார். ஆனால் சம்மந்தன் ஐயா 88 வயதிலும் 216 வது இடத்தில் உள்ளார்.

மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பினை மீட்பேன் என்று பிள்ளையான் கூறிய பொய்யினை நம்பி அவருக்கு வாக்களித்துள்ளார்கள். இவரால் இன்று வரை கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கை எதனையும் செய்யவில்லை. கருணா அம்மான் என்பவர் வந்தார் மக்களின் வாக்குகளைப் பிரித்தெடுத்து விட்டு தற்போது அவரையும் காணவில்லை.

தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை பலப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கம் அதிகரித்துகொண்டு வருகின்றது.

விகாரை மற்றும் பெளத்த மையம் என்பவற்றினை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மயிலத்தமடுவில் 10,000 ஏக்கர் காணியும் மற்றைய இடங்களில் 5000 ஏக்கர் பறிபோயுள்ளது . இதைப்பற்றி கதைக்க முடியாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைக்கப் போகின்றார்கள் அதற்கான திட்டம் தீட்டுகின்றார்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.