கிணறுகள் திடீரென வற்றுவது குறித்து அச்சம் வேண்டாம்!

0

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்நிகழ்வு சாதாரணமானது எனக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை. இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயமாகும்.

இதுபோன்ற நிலைமைகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனால் அபாய நிலைமைகள் அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனவே இதுதொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இது அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான நிகழ்வுகள் அல்ல.

இதேவேளை, தற்பொழுது இலங்கையில் தாழமுக்க நிலை காணப்படுவதனால் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் கடலில் அதிகமான உயரமான கடல் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.