கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 78 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதுடன் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையற்ற விதத்தில் வீடுகளைவிட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பேணி கவனமாக இருக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள 2 வது அலையான கொரோனா தொற்று காரணமாக பி.சிஆர். பரிசோதனையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு காத்தான்குடியில் ஒருவரும், அம்பாறையில் ஒருவரும், தெய்யத்தகண்டியில் ஒருவரும், இறக்காமத்தில் ஒருவருமாக 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில் 78 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருகோணமலை சுகாதார பிராந்தியமான குச்சவெளியில் ஒருவரும், தம்பலகாமத்தில் ஒருவரும், திருகோணமலையில் ஒருவரும், மூதூரில் 6 பேர் உட்பட 13 பேருக்குமம் , மட்டக்களப்பு சுகாதார பிராந்தியமான கோரளைப்பற்று மத்தியில் 35 பேருக்கும், ஓட்டமாவடியில் ஒருவருக்கும், கிரானில் ஒருவருக்கும், காத்தான்குடியில் ஒருவருக்கும், வெல்லாவெளியில் ஒருவருக்கும், பட்டிருப்பில் ஒருவருக்கும், களுவாஞ்சிக் குடியில் ஒருவருக்குமாக 41 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் பொத்துவிலில் 7 பேருக்கும், கல்முனை தெற்கில் 5 பேருக்கும் ,அக்கரைப்பற்றில் ஒருவருக்கும், சாய்ந்தமருதில் ஒருவருக்கும், இறக்காமத்தில் 4 பேருக்குமாக 18 பேருக்கும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் தெய்யத்தகண்டியில் 2 பேருக்கும், பதியத்தலாவையில் 2 பேருக்கும், அம்பாறையில் ஒருவருக்கும், தமணனையில் ஒருவருக்குமாக 6 பேருக்கும் கோரோனா தொற்று கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுடன் கொரோனா தொற்றை தடுக்க எங்களுடன் இணைந்து செயற்படுவதுடன் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.