கொரோனாவால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டைக் கொண்டாடுங்கள்-Dr. சுகுணன்

0

கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதனால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எமது பிரதேசங்களில் அச்சுறுத்துவதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டாது என்ற போதிலும் கொண்டாட நினைப்பவர்கள் சுகாதார பழக்க வழக்கங்களையும் அரசாங்க அல்லது சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடித்து கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிழக்கில் கொண்டாடப்படுவது தொடர்பாக ஊடகவியலாளரிடம் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “சித்திரைப் புத்தாண்டை கடந்த காலங்களில் தமிழ் சிங்கள மக்கள் வீரதீர விளையாட்டுகளில் களித்தனர். ஒரு பக்கம் தீன்பண்டங்கள், இன்னொரு பக்கம் புத்தாடை ஒளிவீச அனுஷ்டானங்கள் களை கட்டியிருந்தது.

எமது பிரதேசங்களில் இந்த முறை அந்தக் கொண்டாட்டங்களை காணமுடியாமல் கொரோனா வைரஸ், எங்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கிறது.

இருந்தாலும் தமிழ், சிங்கள மக்களுக்கு என்னால் கூறக்கூடிய ஒரு விடயம், இந்தக் கொண்டாட்டங்களை இறுகிப்போய் இருக்கின்ற இதயங்களை சந்தோஷப்படுத்த நீங்கள் நிச்சயமாகக் கொண்டாட வேண்டும்.

ஆனால், பொது சுகாதார பழக்க வழக்கங்களையும் அரசாங்க அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் நீங்கள் நிச்சயமாக இறுக்கமாக கையாள வேண்டும். பழைய ஆடைகள் இருந்தாலும் அதை சலவை செய்து புது ஆடைகளாக அணிந்து வீட்டில் தின்பண்டங்களைச் செய்து நீங்கள் இறைவனை வணங்கி இந்தக் கொண்டாட்டங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடுங்கள்!

அத்துடன், பட்டாசு வெடிக்கத் தேவையில்லை. வீட்டுக்குள் நீங்கள் கொண்டாடும் போது அந்த சமூக இடைவெளி எனப்படுகின்ற ஒருவருக்கும் இடையிலான இடைவெளியை நீங்கள் ஒரு மீட்டருக்குக் கூடிய தூரம்வைர நீங்கள் பின்பற்றிக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், நீங்கள் பொதுச் சுகாதார பழக்க வழக்கங்களுடன் மகிழ்ச்சி பொங்க இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடுங்கள் என்ற விடயத்தை கூறி உங்கள் அனைவருக்கும் எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.