கொரோனாவை அழிக்க ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து

0

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில், உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறிந்துள்ளதாக அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தானது, சார்ஸ்-கோவ் 2 வைரஸை அழிக்கக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் விஞ்ஞானி கெய்லி வாக்ஸ்டாப் கூறுகையில்,

“இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், அனைத்து வைரஸ் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளையும் முழுமையாக 48 மணி நேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

வைரசில் ஐவர்மெக்டின் மருந்து எவ்வாறு செயற்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கும்.

நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கிறோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை. இவ்வாறான காலங்களில், உலகெங்கிலும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களிடம் இருந்தால், அது விரைவில் மக்களுக்கு உதவக்கூடும்

தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதைதொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுக்கத் தகுந்த சரியான அளவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலுக்கு எந்த அளவு மருத்து பாதுகாப்பானது என்பது ஆராயப்பட்டு வருகின்றது.

ஐவர்மெக்டின் என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது எனக் கூறப்படுகின்றது.