கொழும்பில் இன்று முதல் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள்!

0

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று (04) அதிகாலை 5 மணியுடன் முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த பகுதியின் தனிமைப்படுத்தலும் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடவத்தை, மீகஹவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் இன்று (04) முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரோஹண விஹார மாவத்தை, பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவின் நெல்லிகஹவத்தை மற்றும் புரண கொட்டுவத்த ஆகிய பகுதிகளின் தனிமைப்படுத்தலும் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியின் தனிமைப்படுத்தல் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.