கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பில் அடக்கம்

0

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து இன்று ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌவ்பர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 40 சடலங்களை மட்டக்களப்பு ஓட்டுமாவடியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு மாளிகாவத்தை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டுமாவடிக்கு 26 சடலங்கள் கொண்டுவரப்பட்டதையடுத்து அவற்றை இரு கிடங்குகளில் பரப்பப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை கொரோனாவினால் உயிரிழந்த 1537 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அதிகளவான சடலங்கள் வருவதனால் அதனை புதைப்பற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த இடப்பற்றாக்குறை தொடர்பாக கடந்த சில தினங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

இந்த பகுதியில் எதிர்வரும் சிலநாட்களின் பின்னர் சடலங்கள் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என அவர் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.