சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

0

சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தினை சிதைக்கும் நோக்கில் அதிகளவான கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

அதாவது, தமிழ் மக்களின் வாக்குகளை சிதைக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே இலக்காக காணப்படுகின்றது.

மேலும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் எம்மை தொடர்ந்தும் விமர்சிக்கிறனர். ஆனால் அவர்களின் எதிர்கால இலக்கு பற்றி தொடர்ந்தும் மௌனம் சாதிக்கின்றனர்.

இதேவேளை தமிழ் இனத்திற்காக போராடிய போராளிகளின் இரத்தம் மண்ணில் சிந்தப்பட்டது விருட்சமாக வளர்வதற்கு தானே தவிர மண்ணோடு மண்ணாய் போவதற்கு அல்ல. இதனை எம்மை விமர்சிப்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் தனித்து செயற்படுவதன் ஊடாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியுமே தவிர, தமிழ் மக்களின் உரிமைகளை ஒருபோதும் பெற்றுவிட முடியாது.

எனவே கடந்த காலங்கைளைப் போன்று அதிகளவான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இம்முறையும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

அப்போதுதான் எமக்கான உரிமைகளை எம்மால் பேரம் பேசி பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.