சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்றினை எடுங்கள் – சஜித் கோரிக்கை

0

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.

அந்தவகையில் மக்களுக்கான நிவாரணங்களை, மருத்துவ வசதிகளை செய்துகொடுக்க வேண்டியதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் தற்போதுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக் கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுக்காக அரசாங்கம் எடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியதுடன் புதுவருடம் வரையில் நாட்டில் அவசரகால சட்டத்தை முன்னெடுத்து செல்வது என்ற காரணிகளையும் தொற்றுநீக்கல் வேலைத்திட்டங்களில் அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் இருக்கின்றது. ஆனால்  நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய், சிறுநீரகம் போன்ற பல நோய்களில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான நோயாளிகள் உள்ளனர். இத்தகைய சூழலில் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை குறித்த கோரிக்கையும் புகார்களும் பல தரப்பில் இருந்து வந்துள்ளது.

இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும், அதேபோல் உலக நாடுகள் ஏதேனும் ஒரு வழிமுறையில் கொரோனாவில் இருந்து விடுபடும் மருத்துவ ஆராய்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இலங்கையும்  இதிலிருந்து விடுபடக்கூடிய விதத்தில் ஆய்வுகளை முன்னெடுப்பதும் அவசியமானதாகும், இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டின் இப்போதுள்ள நிலையில் மக்களுக்கான உணவு உற்பத்தியை பலப்படுத்த வேண்டியது பிரதான காரணியாக அமைந்துள்ளது. அத்துடன் மருந்து பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த சவாலை சரியாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அவசியம்.

அதேபோல் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  சுகாதார, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கான உபகரணங்களை, பாதுகாப்பு கவசங்களை முறையாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் பொது சுகாதார சட்டத்தின் குறைபாடுகள் பல இருக்கின்றனர். அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிமைப்படுதல் முறைமைகள் குறித்தும் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆகவே அவற்றையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில், விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இதில் மக்களை சிரமப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதனை உடனடியாக நீக்க மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டும். அதுமட்டுமல்ல  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்கள தரவுகளின்படி, ஒரு நபர் வாழ ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம்  ரூபாய் தேவைப்படுகிறது.

இப்போது வேலையாட்கள் தமக்கான வேலைவாய்ப்புகளை இணைத்துள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரண திட்டங்களை வழங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தால், குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும். அத்துடன் இப்போது வரையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உரிய நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்.

பிற நகரங்களில் இருந்து தலைநகரில் வேலைசெய்ய வந்தவர்கள் மீண்டும் அவர்களின் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது. எனவே அவர்களை உரிய முறையில் அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்ப ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்டத் தொழிலார்களின் அன்றாட பணிகள் மற்றும் பிற பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும், அதேபோல் நாட்டில் பல்வேறு மத, கலாசார தன்மைகள் இருக்கின்றன.

இவற்றை மதிப்பளித்து அதேவேளையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அவை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும். இந்த காரணிகள் குறித்து சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இது குறித்த தீர்மானம் எடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.