சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

0

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் அங்கு மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றினை தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் பீஜிங் உட்பட சுமார் ஐந்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்று பரவலை தடுக்க 40 இலட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு வேறு மாகாணங்களுக்கு செல்ல விரும்புவோர் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை உடன் வைத்திருத்தல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலாத்தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மொங்கோலியாவில் இருந்து வருகை தந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.