சுமந்திரனை கடுமையாக சாடினார் டக்ளஸ் தேவானந்தா!

0

சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கப்பல் விபத்துக்குக் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகின்ற கடற்பரப்பில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு உட்பட்ட நாட்டை சூழவுள்ள பாதிப்புக்கள் அற்ற கடல் பிரதேசங்களிலும் ஆழ்கடல் பிரதேசத்திலும் பிடிக்கப்படுகின்ற மீன்களே கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து பிரதேச சந்தைகளிலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

அவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களிலும் சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் கலந்து இருக்கின்றதா என்பது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே கடலுணவுகளை உண்பதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இவை தொடர்பில் எந்தவிதமான பிரஞ்ஜையும் இன்றி, அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிரான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்கின்ற அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவல் என்று நினைத்து உரலை இடித்துள்ளார்.

அதாவது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்ட கடல் பிரதேசங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்கிக்கப்படுகின்றது.

அவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் கடலுணவு உட்கொள்வதை மக்கள் தவிர்ப்பார்களாயின், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக சுமந்திரன் கரிசனைபட்டதாக தெரியவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் வடக்கு மாகாண சபை ஆட்சியை வீணாக்கியவர்கள், கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள், ரணில் மைத்திரி ஆட்சியில் கிடைத்த வாய்ப்பை அலரிமாளிகைக்குள் அடகு வைத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையோடு செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.