ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு வழங்கிய ஆலோசனை

0

மத்திய வங்கி வழங்கிய நிவாரணங்களை பொருளாதாரத்தையும், மக்களையும் பலப்படுத்துவதற்காக பயன்படுத்துவது அரச வங்கிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

உலகளாவிய தொற்று நோயினால் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர அனைத்து வணிக முயற்சிகளுக்கும் நேரடியாக ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அவற்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். 

மத்திய வங்கியின் செயற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக (17) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இக்கருத்துக்களை முன்வைத்தார். 

மத்திய வங்கியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசியமான சூழலை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் அரச வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சம்பிரதாய முறைகளில் இருந்து விலகி புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பணம் நாடு முழுவதும் புலக்கத்தில் விடப்பட வேண்டும் என்றும், உண்மையான வாடிக்கையாளர், மற்றும் வியாபாரங்களை இனங்கண்டு கடன்களை வழங்குதல், நாடு முழுவதும் 600 கிளைகளைக்கொண்ட மக்கள் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும் என்றும் அதன் பின்னூட்டலுக்கு அனைத்து முகாமையாளர்களும் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார். 

வங்கிகளை கிராமத்துக்கு எடுத்துச்செல்வதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் இந்நிதியை பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடனாக வழங்கப்பட கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். 

குத்தகைக் கடன் தவணைகளுக்கு வழங்கப்பட்ட 06 மாதகால சலுகையானது, குறித்த தரப்பினருக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். நிர்மாணத்துறையினருக்கும் முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். மத்திய தர வருமானம் பெறுபவர்களின் வீட்டுத் தேவையை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் மக்கள் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். 

கடந்த 08 மாதங்களில் மக்கள் வங்கி செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் தொடர்பாக தலைவர் சுஜீவ ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். 

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பொதுமுகாமையாளர் பொனிபஸ் சில்வா, மக்கள் வங்கி மற்றும் பீபல்ஸ் லீஸிங் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.