தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும் – சாணக்கியன்

0

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பெரிய கல்லாறு மக்களால் 14.09.2020ம் திகதி நடாத்தப்பட்ட வரேவேற்பு நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அங்குமிங்கும் இருப்பதால் பலமைடைவது சிங்களவர்கள் தான்.

தமிழர்களாகிய நாம் அதனால் பலவீனமாகத்தான் இருக்கின்றோம். தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பின்னர் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

அப்போது தான் சிறுபாண்மையினராகிய தமிழ் பேசும் மக்கள் பலத்துடன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் அளவிற்கு மாறலாம்.

நான் விமர்சனங்களால் தான் வளர்ந்தவன். என்னை தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததன் விளைவாக தான் நாடாளுமன்ற உறுப்பினராக உருவாக்கியிருக்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி என்னை நாடாளுமன்ற சபாநாயகர் குழுவிலும், கோப் குழுவிலும் ஒரு உறுப்பினராக அதுவும் ஒரே ஒரு தமிழனாகவும் என்னை தெரிவு செய்துள்ளார்கள். இதற்கும் என்னை விமர்சிக்கின்றார்கள். இனிமேலும் என்ன பதவிக்கு அனுப்புவதற்காக என்னை விமர்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு தேவையான சேவைகளை புரிய வேண்டும். அதற்காக நாங்கள் பல வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செய்வதற்காக திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் மக்களுக்காக அரசாங்கத்துடன் பேசி செய்ய வேண்டும்“ எனவும் தெரிவித்தார்.

கோட்டைக்கல்லாறு விளையாட்டு கழகங்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் மக்கள் இணைந்து அமோகமான வரவேற்பளித்தனர்.  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சினி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.