திருகோணமலை கடற்படைத் தளம் சித்திரவதைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா? – முகாமின் தளபதி வாக்குமூலம்

0

திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் சித்திரவதைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள கன்சைட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோட்டா முகாம் என அழைத்தனர் எனவும் சுமித் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் என்பவரே முதலில் ஊடகங்களில் கோட்டாபாய முகாம் என்பதை பயன்படுத்தினார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிஐடியின் முன்னாள் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா மற்றும் சானி அபயசேகர ஆகியோரும் கோட்டா முகாம் என கூறியிருந்ததாகவும் அந்த அதிகாரி சாட்சியம் வழங்கியுள்ளார்.