திருமலையிலிருந்து வெளியேறினார் மஹிந்த?

0

பிரதமர் பதவியை துறந்து, அலரிமாளிகையில் இருந்து வெளியேறி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கிருந்த மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனா கோகம ஆகியவற்றின் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நாட்டில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அன்று மாலை பிரதமர் மஹிந்த பதவி துறந்தார். போராட்டக்காரர்கள் அன்றிரவு அலரிமாளிகையை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் மறுநாள் காலை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் அங்கிருந்து பாதுகாப்பாக திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில்கூட மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.