தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி

0

பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த காசோலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இக்காசோலைகளை ஆலயங்களுக்கு வழங்குவதனை அடையாளப்படுத்தும் வகையில் இன்றைய தினம் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளின் ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டதுடன், ஏனைய ஆலயங்களுக்கு காசோலை வழங்கும் நடவடிக்கை மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும். 

இதற்கு முன்னர் நவராத்திரி தினத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய 50 ஆயிரம் ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கப்பட்டிருந்தது. 

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் பெருந்தோட்டத் துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.