தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களின் காணிகளை அபகரிக்க திட்டம்

0

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரிக்கவே ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மட்டக்களப்பிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘கிழக்கு மாகாணத்திலே ஒரு துரித காணி அபகரிப்பை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையிடம் சந்தித்து அந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தலைமையில் விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் கொண்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும் திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அண்மை காலங்களில் பல்லாயிரக்கணக்கான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கை தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு இந்த செயற்பாடு ஜனாதிபதியினுடைய தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

எனவே இந்த ஆட்சி என்பது இனவாத ஆட்சியாகவே நாம் பார்க்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் இந்த போர்வையில் நடந்து வருகின்றது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.